உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, சில மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்களது மஸ்ஜித்களையும் பதவிகளையும் அரசியல் நோக்கங்களுக்காக துஷ்பிரயோகப்படுத்துவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திணைக்களம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, அனைத்து மஸ்ஜித் நம்பிக்கையாளர்களும் மற்றும் பொறுப்பாளர்களும் தேர்தல் பிரச்சாரங்களில் மஸ்ஜித்களையும் அதன் சுற்றுச்சூழலையும், உடமைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல், தங்களது நம்பிக்கையாளர் பதவிகளையும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஸ்ஜித் அல்லது நம்பிக்கையாளர் பதவிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்யும் நிலை ஏற்பட்டால், அதற்கு எதிராக வக்பு சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின், உரிய ஆதாரங்களுடன் திணைக்களத்தின் கள உத்தியோகத்தர் ஊடாக முறைப்பாடு செய்யுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
