மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஒதுக்கிய நிதி 51 மில்லியன் மாத்திரமே – சாணக்கியன் எம்.பி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஜனாதிபதியால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதி வெறுமனே 51 மில்லியன் மாத்திரமே. ஏன் அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அபகரித்து விடுவார் என்ற பயத்தினாலா குறைந்த நிதி ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கூளாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழக மைதானத்தில் முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உள்ளிட்ட கட்சியின் பிரதேசக் கிளை நிர்வாகிகள், மாநகரசபையின் 20 வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த பற்றாளர்கள் கௌரவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு சபைக்குப் போட்டியிடும் வட்டார வேட்பாளர்கள் 20 பேரும், பட்டியல் வேட்பாளர்கள் 16 பேருமாக 36 வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
