சாணக்கியன் எம்பியின் கருத்துக்கள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடப்படும் என்கிறார் இனிய பாரதி பாராளுமன்றத்தில் அண்மைக் காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை அனைத்தும் அப்பட்டமான பொய்கள். எனவே, அவருக்கு முதுகெலும்பு இருந்தால் வெளியே வந்து இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஷ்பகுமார் தெரிவித்துள்ளார்.
சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனியபாரதி அம்பாறை மாவட்ட ஊடக மையத்தில் நேற்று (06) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் அவர் தெரிவித்ததாவது
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என்னைப் பற்றி பாராளுமன்றத்தில் தெரிவித்தது அப்பட்டமான பொய். முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வந்து இவ்வாறு ஊடக மாநாட்டில் அந்த விடயங்களை நிரூபிக்கட்டும் என நான் அவருக்குப் பகிரங்கமாக சவால் விடுகிறேன்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்தை மறுக்கின்றேன். அவருக்கு பாராளுமன்ற சிறப்புரிமை இருக்கிறது என்பதற்காக மற்றவரின் சுய கௌரவத்துக்கு இழுக்கேற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை.
பிள்ளையானின் சகா நான் என குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள்தான் அதிகம். இவ்வாறிருக்க இவ்வாறு என்னை வம்புகிழுத்துள்ளார்.
அது மாத்திரமல்ல நான் கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றதாக பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களில் நான் கொழும்பு செல்லவே இல்லை . எனது சாரதி சுதா என்று கூறுகிறார். முடிந்தால் அந்த சுதாவை காட்டுமாறு சவால் விடுகின்றேன் .
எனவே, பாராளுமன்றத்தில் பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிவரும் அவரின் இந்த சித்து விளையாட்டுகளை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபரிடம் நான் முறைப்பாடு செய்யவுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அவர் இவ்வாறான ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக நேருக்கு நேர் கூறட்டும் என சவால் விடுகின்றேன் என்றார்.
